தலைப்பு செய்திகள்
துப்பாக்கிச் சூட்டில் நாகை பிஎஸ்எஃப் வீரர் பலி.. அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்.

மேற்கு வங்கத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான நாகையைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரரின் உடல் சொந்த ஊரான கீழையூரில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் ஞானசேகரன் (45). எல்லை பாதுகாப்பு படை வீரரான இவர், மேற்கு வங்கத்தில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்களுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார்.
அவரது உடல் மேற்கு வங்கத்தில் இருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் கொண்டு வரப்பட்டது. அதனைத்தொடர்ந்து, ராணுவ வாகனம் மூலமாக சொந்த ஊரான கீழையூருக்கு நேற்று இரவு எடுத்து வரப்பட்டு பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
ஞானசேகரன் உடலுக்கு, நாகை மாவட்ட காவல்துறை சார்பில் டிஎஸ்பி சரவணன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் தொகுதி எம்எல்ஏவான ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஈசனூர் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு ஞானசேகரன் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஞானசேகரன் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் அரசுத்துறை அதிகாரிகள், கிராம மக்கள் என ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
