மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள்அவதிபட்டு வருகின்றனர்.

சங்கரன்பந்தல் அரசு
ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 15ஆண்டுகளுக்கு முன்பு 4 மருத்துவர்கள் உள்ளிட்ட 15
ஊழியர்கள் பணியாற்றி வந்துள்ளனர். கர்ப்பிணிகள்
மற்றும் பிற நோயாளிகளுக்கு 20 படுக்கைகள்
கொண்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு
அக்கட்டடம் முற்றிலும் விரிசல் ஏற்பட்டு பழுதடைந்து
பயன்படுத்தாமல், 2020-ஆண்டு ரூ.60 லட்சத்தில்
புதிய கட்டடம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது.
தற்போது சித்த மருத்துவர் உள்ளிட்ட 2 பெண்
மருத்துவர்கள் பகல் நேரங்களில் மட்டும் பணியாற்றி
வருகிறார்கள். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு
நல்லாடை, பெரம்பூர், திருவிளையாட்டம்,
மேமாத்தூர், திருவிடைக்கழி, விசலூர், இலுப்பூர்,
உத்திரன்குடி, எடுத்துக்கட்டி சாத்தனூர் உள்ளிட்ட
10-க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதியில் இருந்து
நாள்தோறும் ஏராளமான மக்கள் பல்வேறு
நோய்களுக்கு வந்து சிகிச்சை பெற்றுச்
செல்கின்றனர்.
இந்நிலையில் இங்கு சிகிச்சைக்கு வரும்
கர்ப்பிணிகள் மற்றும் பிற நோயாளிகள் போதிய
படுக்கை வசதி இல்லாமல் அவதிபடுகின்றனர்.
மேலும், இரவு, பகல் நேரங்களில் அடிக்கடி ஏற்படும்
மின்தடையால் கூடுதல் சிரமம் அடைகின்றனர்.
இந்நிலையில், இரவு நேரங்களில் மருத்துவர்கள்
இல்லாததால், சிகிச்சை பெற வரும் நோயாளிகள்
அவசர சிகிச்சை பெறமுடியாமல் 25கி.மீ.
தொலைவில் உள்ள மயிலாடுதுறை, காரைக்கால்
மற்றும் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல
வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால்,
உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மேலும், உயிர் காக்கும்
மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள்
இல்லாததால் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை
அளிக்க முடியாமல் வேறு அரசு மருத்துவமனைக்கு
அனுப்பிவைக்கப் படுகிறார்கள். இரவுநேர காவலர் இல்லாததால் பழுதடைந்துள்ள
ஆரம்ப சுகாதார நிலையம் முன் மதுகுடிப்பவர்கள்
பாட்டில்களை வீசிவிட்டு செல்வதாகவும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.எனவே, இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இரவு
நேரங்களில் மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும், மேலும் நோயாளிகளுக்கு கழிப்பறை வசதி, இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையை சமாளிக்க ஜெனரேட்டர் வசதி, உயிர் காக்கும் மருந்துகள்
இருப்பு வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
