மாவட்ட செய்திகள்
பயன்பாட்டிற்கு வந்த 2 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. – சென்னை மெட்ரோ நிர்வாகம் அசத்தல்.

சென்னை மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டத்தின் கீழ் 2021 பிப்ரவரியில் இருந்து, வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை பயணிகள் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இவ்வழித்தடத்தில், திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
இந்த இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இன்று முதல் மெட்ரோ ரயில்கள் நின்று செல்லும் என்றும், விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கள் வாகனங்களை இந்த மாதம் மட்டும் இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம் என்றும் மெட்ரோ நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதையொட்டி, இவ்விரண்டு நிறுத்தங்களிலும் இன்று காலை 7:00 மணியில் இருந்து, ரயில்கள் நின்று செல்கின்றன.
2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29-ம் தேதி சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பயணிகளுக்கான சேவையைத் தொடங்கியது. இச்சேவை தொடங்கி 7 ஆண்டு பூர்த்தி அடைந்த நிலையில், பயணிகளுக்கான பயண சேவையை மெட்ரோ நிறுவனம் தொடர்ந்து வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது.
கடந்த 2021-ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ இரயிலுக்கான முதல் கட்டம் மற்றும் அதன் விரிவாக்கத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 54.41 கி.மீ தூர சுற்றத்துக்கு மெட்ரோ இயக்கம் தங்குதடையின்றி இயங்கி வருகிறது.
மேலும், தற்போது சென்னை மெட்ரோ இரயில் பயணிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது என்றும், இந்த மார்ச் மாதம் 11-ம் தேதி அன்று மட்டும் 2 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயிலில் பயணித்துள்ளார்கள் என்றும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
