அரசு பேருந்தில் செல்ல இருக்கை இருந்தும் இடையில் இறங்கும் பயணிகள் ஏற வேண்டாம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணி
அரசு பேருந்தில் செல்ல இருக்கை இருந்தும் இடையில் இறங்கும் பயணிகள் ஏற வேண்டாம் : கோவையில் நடத்துனரிடம் கேள்வி எழுப்பிய வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணி – செல்போன் வீடியோ வைரல்
அரசு போக்குவரத்து கழகம் சமீப காலமாக பல்வேறு சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் மேலும், மேலும் அரசு போக்குவரத்து ஊழியர்களால் நாளுக்கு நாள் சர்ச்சை எழுந்து கொண்டே செல்கிறது.
தமிழகத்தில் தனியார் பேருந்துகளை விட அதிக எண்ணிக்கையில் அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றன. இருந்த போதும் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதற்கு பயணிகளை மரியாதை இல்லாமல் தரக்குறைவாக பேசுவதும், நடத்துவது மேலும் உரிய நேரத்தில் பேருந்துகளை இயக்காமல் இருப்பதும், உரிய சில்லறை கொண்டு வராமல் ஏன் பயணிக்கிறீர்கள் என்று திட்டுவதும், பயண சீட்டு எடுக்கும் நபர்களிடம் சரியான சில்லறை கொடுக்காமல் ஏமாற்றும் நடத்துனர்களாலும், பெண்களுக்கு இலவசம் என்று அறிவித்த பிறகு பெண்களை ஏளனமாக தரக்குறைவாக பேசுவதும், நடத்துவதும் வாடிக்கையாகி விட்டது. மேலும் சரிவர பராமரிப்பு இன்றி அடிக்கடி நடுவழியில் பழுதாகி நிற்பதும், பழைய இரும்பு பொருள்களுக்கு எடை போடும் அளவிற்கு இருக்கும் பேருந்துகளை இயக்கும் நிர்வாகத்தாலும் பொதுமக்களும், பயணிகளும் தற்பொழுது வரை அதிக பாதிப்புகளை சந்தித்து உள்ள செய்திகள் நாளுக்கு, நாள் தொடர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் கோவை, சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு கரூர் வழியாக திருச்சி செல்லும் தமிழக அரசு பேருந்து இருக்கையில் காலியாக இருந்தும் இடையில் இறங்கும் பயணிகள் ஏற வேண்டாம் என்றும் நடத்துனர் கூறி உள்ளார்.
அதற்கு அதில் ஒரு பயணி காங்கேயம் கரூர் இடையில் இறங்க வேண்டும். சுமார் மூன்று மணி நேரம் நின்று பயணம் எவ்வாறு செய்வது என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு அரசு ஊழியர் என்று அதிகாரமாக, பதிலளிக்கும் நடத்துனர். யாரையும் ஏற வேண்டாம் என்று கூறவில்லை பேருந்து கிளம்புவதற்கு 5 நிமிடம் முன்பு ஏறுங்கள் என்று தான் கூறுவதாக கூறி உள்ளார்.
கோவையில் இருந்து கரூர் சென்றாலே தனியார் பேருந்துகளில் பயணிகளை ஏற்று அமர வைத்து கொள்ளும் நடத்தினர்கள் இருக்கும் போது கோவையில் இருந்து திருச்சி வரை செல்லும் பயணிகள் மட்டும் தான் முதலில் ஏற்றுவோம், பிறகு நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள் என்று கூறுவது அரசு பேருந்தில் பொதுமக்கள் எவ்வாறு பயணிப்பது என்பது கேள்விக்கு உள்ளாகி உள்ளது. மேலும் இடைப்பட்ட ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் அமர்ந்து செல்ல முடியாத அவல நிலை தொடர்ந்து நடந்து கொண்டே உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு எட்டப்படுமா ? என்பது எட்டா கனியாகவே உள்ளது. பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்று தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கினாலும் தற்பொழுது வரை தமிழக அரசு நடத்தி வருகிறது. இதுபோன்று பொதுமக்களை மிரட்டி, அச்சுறுத்தும் தோனியில் ஈடுபடும் நடத்துனர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பொதுமக்களும், பயணிகளும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் பாதுகாப்பாக பயணங்களை மேற்கொள்ள முடியும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.