இ-மெயில் வாயிலாக பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவன்!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் இயங்கி வருகிறது சிருஷ்டி பள்ளி. இந்த பள்ளியில் வேலூர் மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டமான திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்தும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அப்பள்ளிக்கு நேற்று இரவு ஒரு இ-மெயில் வந்துள்ளது.
அதில் பள்ளி வகுப்பறைகளில் 28 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் இதை உங்களால் கண்டுபிடிக்க முடியாது என அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தனியார் பள்ளியின் நிர்வாகத் தலைவர் எம். எஸ். சரவணன் உடனடியாக காட்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்த இ-மெயில் இதே பள்ளியில் பயிலும் ஏழாம் வகுப்பு மாணவனின் மெயில் ஐடியில் வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் ஏழாம் வகுப்புமாணவரரிடம் மேற்கொண்ட விசாரணையில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ஸ்டார் திரைப்படத்தை பார்த்து தனக்கு விடுமுறை வேண்டும் என விளையாட்டுத்தனமாக இப்படி மெயில் அனுப்பியதாக கூறியுள்ளான் அந்த மாணவன்.
இதனையடுத்து போலீசார் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என மாணவ, மாணவிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்குமாறு ஆலோசனைகளை வழங்கிவிட்டு சென்றனர் .இதனால் அந்த பள்ளியில் சுமார் இரண்டு மணி நேரம் திடீர் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.