கணவர் இறந்த அதிர்ச்சியில் உயிரை விட்ட மனைவி!

இறப்பிலும் இணை பிரியாத தம்பதியரைப் பற்றி அந்த சோகத்திலும் பேசி பேசி நெகிழ்கிறார்கள் ஓசூர் மக்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கணவர் நெஞ்சுவலியால் உயிரிழந்த அதிர்ச்சியில் மனைவியும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாரதியார் நகரை சேர்ந்தவர் மாணிக்கம் (70). ஓய்வுபெற்ற ஆசிரியரான இவருக்கு கோமதி (63) என்கிற மனைவி உள்ளார். இந்த நிலையில், நேற்று அதிகாலை மாணிக்கத்துக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர், மாணிக்கத்தின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய ஏற்பாடு செய்து வந்தனர். இதனிடையே, கணவர் மாணிக்கம் மீது அதிக அன்பு வைத்திருந்த கோமதி, அவரது பிரிவால் மனமுடைந்து காணப்படார். அப்போது, காலை 8 மணியளவில் கோமதி திடீரென மயங்கி உள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரிடம் சென்று பார்த்தபோது அவரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
