குவைத் நாட்டில் சிறை வைக்கப்பட்ட 4 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி கடலில் இறங்கி மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மோர்பண்ணை மீனவ கிராமத்தில் குவைத் நாட்டில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட 4 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி இன்று ஒரு நாள் கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் வேலை நிறுத்தம். மேலும் கடலில் இறங்கி சிஐடியு தொழிற்சங்கத்துடன் இணைந்து மீனவ பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடலோர மீனவ கிராமமான மோர் பண்ணை கிராமத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் மகன் சந்துரு(25), திருப்பாலைக்குடி பகுதியைச் சேர்ந்த ஜான் மகன் சேசு(45) முத்து மகன் கார்த்திக்(25) மற்றும் பாசிபட்டினத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் வினோத்குமார்(27) ஆகியோர் குவைத் நாட்டிற்கு மீன்பிடித் தொழிலுக்காக கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு சென்றுள்ளனர்.
அங்கு மற்ற நாட்டு மீனவர்களுடன் சேர்ந்து கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது குவைத் நாட்டு கடற்படையினர் அவர்களது படகுகளை ஆய்வு செய்ததில் போதை பொருள் இருந்ததாக கூறி அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது சம்பந்தமாக சிறை வைக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் அமைச்சர்களிடம் மனு அளித்துள்ளனர்.