சிவகங்கையில் கள ஆய்வில் கிடைத்த தங்க மணிகள்: தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பு!
காளையார்கோயில் அருகே கொல்லங்குடி பகுதியில் தொல் நடைக் குழுவினரால் கண்டெடுக்கப்பட்ட தங்க பொருள்கள் தமிழ்நாடு தொல்லியல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், களையார்கோயில் அருகே கொல்லங்குடி ஊராட்சி பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி, ஓடுகளுக்கிடையே கிடைத்த தங்கத்தாலான குழாய்கள் தொல்லியல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவகங்கை தொல் நடைக் குழு நிறுவனர் புலவர் காளிராசா செய்தியாளர்களிடம் கூறும்போது, “கொல்லங்குடி ஊராட்சிக்குட்பட்ட சுந்தனேந்தல் சேகரம் உசிலனேந்தல் கண்மாய் பகுதியில், கடந்த 25-ம் தேதி, சிவகங்கை தொல்நடைக்குழு உறுப்பினர் சரவணன் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, முதுமக்கள் தாழி, ஓடுகளுக்கிடையே தங்கம் உள்ளிட்ட பொருள்கள் கிடைத்திருப்பதாக எனக்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் நேரில் சென்று விரிவான ஆய்வு மேற்கொண்டோம். அதில், தாலி போன்ற கயிற்றுச் சரடில் கோர்த்து அணியக்கூடிய குண்டுமணி என அழைக்கப்படும் அணிகலனாக இருக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்தது.