BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

அவமதிப்பு வழக்கில் இடையீட்டு மனு இணைக்க முடியாது!

பெத்தேல் நகர் பாதுகாப்பு பேரவையின் கூடுதல் மனு தள்ளுபடி.
அவமதிப்பு வழக்கில் இடையீட்டு மனு இணைக்க முடியாது!

பெத்தேல் நகரில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இணைக்கக் கோரி பெத்தேல் நகர் பாதுகாப்பு பேரவை தாக்கல் செய்த கூடுதல் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கடந்த 2015, 2017-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது.

ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நிலையில் தமிழக அரசு கால அவகாசம் கோரியது. அதை ஏற்று குடியிருப்புகளை காலி செய்ய இந்த கல்வியாண்டு வரை அவகாசம் அளித்த நீதிமன்றம், வணிக கட்டிடங்கள் மீதான நடவடிக்கையை தொடர வேண்டுமென உத்தரவிட்டது.

இந்நிலையில் பெத்தேல் நகர் பாதுகாப்பு பேரவை தரப்பில், 30 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வரும் 30 ஆயிரம் மக்களை ஒரே இரவில் அப்புறப்படுத்தக் கூடாது எனவும், புதிய இடத்துக்கு மாறுவதில் சிக்கல்கள் உள்ளதாகவும் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மெய்க்கால் புறம்போக்கு நிலத்தை நத்தம் நிலமாக மாற்றி பட்டா வழங்க அரசுக்கு உத்தரவிடும் வகையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தங்களை இணைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், பிரதான வழக்கில்தான் இடையீட்டு மனுதாரர்களாக இணைய முடியும் என்றும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இணைக்க முடியாது என கூறி, பெத்தேல் நகர் பாதுகாப்பு பேரவை தொடர்ந்த கூடுதல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )