தலைப்பு செய்திகள்
கேரள அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம் !

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான மனு மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையில், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும்வரை முல்லை பெரியாறு அணைக்கான கண்காணிப்பு குழு கூடுதல் அதிகாரத்துடன் செயல்பட வேண்டும் என்று கேரள அரசு கூறியது.
இது மத்திய அரசின் யோசனை என்றும், அதை ஏற்பதாகவும் கேரள மாநில அரசு தெரிவித்திருந்தது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்க காலக்கெடு வேண்டும் என்ற கோரிக்கையையும் கேரள அரசு முன்வைத்தது. இதை உருவாக்க காலம் அதிகமாக எடுத்துக் கொள்வது தொடர்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு அதிருப்தி தெரிவித்திருந்தது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் செயல்படும் வரை, கண்காணிப்புக்குழு முழு அதிகாரத்துடன் செயல்படுவதில் எந்தவித ஆட்சேபணையும் இல்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட அணையை பலப்படுத்தும் பணிகள் இதுவரை நடைபெறாமல் இருப்பதற்கு கேரள அரசு முட்டுக்கட்டை விதிப்பதாக தமிழக அரசு குற்றம் சாட்டியது.
இரு தரப்பு விசாரணையையும் கேட்ட நீதிபதிகள், முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்துக்கு முதலில் தீர்வு காணலாம் என்றும், புதிய அணை கோரிக்கை தொடர்பாக பின்னர் விசாரிக்கலாம் என்று தெரிவித்தனர்.
