தலைப்பு செய்திகள்
முல்லை பெரியாறு கண்காணிப்புக்குழு உத்தரவை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு.

முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்தது. அதில், ” அணையின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான இயக்கம் மிகவும் முக்கியம். அணையின் கண்காணிப்பு மேற்பார்வை குழு நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
” அணை பாதுகாப்பு ஆணையம் செயல்பாட்டுக்கு வரும் வரை மேற்பார்வை குழுவுக்கு முல்லை பெரியாறு அணையில் அனைத்து அதிகாரமும் உள்ளது. இரு மாநிலத்தில் இருந்தும் தலா ஒரு நிபுணர் என கூடுதலாக மேற்பார்வை குழுவில் இணைக்கிறோம். தற்போதைய நிலையில் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மேற்பார்வை குழுவே அனைத்தையும் கவனிக்கும். எனவே, கண்காணிப்பு மேற்பார்வை குழுவின் உத்தரவை கடைபிடிக்காமல் இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாநில தலைமைச் செயலாளரே பொறுப்பு” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், ” கண்காணிப்பு மேற்பார்வை குழுவின் உத்தரவுகள், பரிந்துரைகளை இரு மாநிலமும் கடைபிடிக்க வேண்டும். குழுவுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கண்காணிப்பு மேற்பார்வை குழுவின் உத்தரவுகளை மதிக்காமல் இருந்தால் அது நீதிமன்ற அவமதிப்பு என்பதோடு கடும் நடவடிக்கைக்கும் ஆளாக நேரிடும். மேற்பார்வை குழுவில் ஒரு மத்திய அரசு வல்லுனரும் இடம்பெறுவார்” என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
