தலைப்பு செய்திகள்
பெங்களூரு அருகே உலகின் உயரமான பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை திறப்பு.

பெங்களூரு அருகே உலகின் உயரமான பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை ராமநவமியையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா பிதனகெரே கிராமத்தில் பசவேசுவரா மடம் உள்ளது. இந்த மடத்தில் 161 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகவும் உயரமான ஆஞ்சநேய சாமி சிலையாக இந்த சிலை கருதப்படுகிறது. தமிழகத்தின் மாரிமுத்து என்பவர் இந்த சிலை வடிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தார்.
இவர் 50 தொழிலாளர் குழுவுடன் 2014-ம் ஆண்டில் சிலை அமைக்கும் பணிகளை தொடங்கினார். தொடர்ந்து 7 ஆண்டுகள் பணியாற்றி, சிலையை உருவாக்கினார். சிலைக்கு இரும்பு மேடை, வலுவான சிமென்ட் கான்கிரிட் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கை சூழலில் இச்சிலை அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆஞ்சநேயர் சிலை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ராமநவமியையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக இந்த சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமை தாங்கினார். சிலை திறப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிலை திறக்கப்பட்டதும் பக்தர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
