தலைப்பு செய்திகள்
திருப்பதியில் வாராந்திர சேவைகள் நிறுத்தம்!! அதிருப்தியில் பக்தர்கள், மடாதிபதிகள்!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிய முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் மடாதிபதிகளும், பக்தர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் பக்தர்கள் கூட்டம், கூட்டமாக குவிந்து வருவது வழக்கம். தற்போது கோடைகால விடுமுறைக்கு சுற்றுலாவாகவும், நேர்த்திக்கடனை செலுத்த வேண்டும் என்பதற்காகவும் பக்தர்கள் திருப்பதியை நோக்கி படையெடுத்துள்ளனர். இதனால் தினசரி பக்தர்கள் வரவு அதிகரித்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையானக்கு தினசரி, வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர சேவைகள் எனப்படும் ஆர்ஜித சேவைகள் நடப்பது வழக்கம். கட்டணம் செலுத்தி இந்த சேவைகளில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்காலிகமாக வாராந்திர சேவைகளை நிறுத்தி வைப்பதாக திருப்பதி தேவஸ்தானம் அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதற்கு முன்னர் விசேஷ பூஜை, சகஸ்ர கலசாபிஷேகம், வசந்தோற்சவ ஆர்ஜித சேவைகளை ஏற்கனவே தேவஸ்தானம் ரத்து செய்துள்ள நிலையில் தற்போது வாராந்திர சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அஷ்டதள பாத பத்மாராதன, திருப்பாவாடை மற்றும் நிஜபாதை தரிசன ஆர்ஜித சேவைகளையும் விரைவில் திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்ய முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து சேவைகள் ரத்து செய்யப்படுவதால், திருப்பதி தேவஸ்தான போர்டுக்கு மடாதிபதிகள், பக்தர்கள் மற்றும் பீடாதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆர்ஜித சேவைக்கு புக் செய்து டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்களுக்கு தற்போது விஐபி பிரேக் தரிசன ஏற்பாடு செய்யப்பட்டு தரிசனத்திற்கு தேவஸ்தானம் ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
