BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

மாநில அளவில் அனைத்து கிராம வேளாண் திட்டங்கள் தொடர்பான கருத்தரங்கம்.

மாநில அளவில் அனைத்து கிராம வேளாண் திட்டங்கள் தொடர்பான கருத்தரங்கம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

சென்னை: கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தினை சிறப்பாக ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் விதமாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் திட்டங்களுடன், வேளாண்மை-உழவர் நலத் துறையின்கீழ் செயல்படும் திட்டங்களை இணைத்துச் செயல்படுத்துவதற்கான, வழிமுறைகளை ஆராய்வதற்கான, மாநில அளவிலான ஒருங்கிணைப்பு கருத்தரங்கு நேற்று (பிப். 26) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஒருங்கிணைப்புக் கருத்தரங்கில், தலைமைச் செயலாளர், அரசு முதன்மைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர், வேளாண்மை-உழவர் நலத்துறை தலைவர்கள், தலைமைப் பொறியாளர்கள், வேளாண்மைப் பொறியியல் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் அவரது உரையில், இரு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படும்போது கிராமங்கள் தன்னிறைவு அடைவதுடன் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியையும் அடையும் எனக் கூறினார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலாளரின் உரையில், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இவ்விரு துறைகளும் ஒன்றாகச் சேர்ந்திருந்ததையும், பின்னர் தனியாகச் செயல்பட்டு வருவது குறித்தும் கூறினார். தற்போது இவ்விரு துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் திட்டப்பலன்கள் சீரிய முறையில் கிராம மக்களுக்கு விரைந்து சென்றடையும் எனவும் தெரிவித்தார்.

தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு அவரது உரையில், இரு துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் போது ஒட்டுமொத்த பலன்கள் கிடைக்கும் என்றும், திட்ட நோக்கங்கள் மக்களைச் சிறந்த முறையில் சென்றடையும் என்றும் தெரிவித்தார்.

மேலும், வேளாண்மை – உழவர் நலத்துறையில் இல்லாத திட்டங்களை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை திட்டங்களைக் கொண்டு ஒருங்கிணைத்துச் செயல்படுத்தி கிராமங்களில் முழுமையான வளர்ச்சியை அடைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் உரையில், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம், கிராமச் சாலைகள் திட்டம் மற்றும் இதர ஊரக வளர்ச்சி திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் கிராம அளவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட முடியும் என்று தெரிவித்தார். கிராமப்புறத்தில் உற்பத்தி செய்யப்படும் விளைபொருள்கள் நகரங்களுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்வதற்குத் தரமான கிராம சாலைகள் அமைப்பதற்கு தமது துறை குறிப்பிடத்தக்கப் பங்களிப்பினை அளிக்கும் எனத் தெரிவித்தார். இவ்விரு துறைகளின் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், வட்டார அளவிலான அலுவலர்கள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் இக்கருத்தரங்கினை காணொலி காட்சி வாயிலாக நேரலையாகக் காணுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )