திருவாலங்காடு பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம், திருவாலங்காடு பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.இதில் 20 அடி நீளத்திற்கு பக்தர்கள் அலகு குத்தியும்,காவடி ஏந்தியும் சென்றது காண்போரை பரவசப்படுத்தியது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாலங்காடு கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.மிகபழமையான இக்கோவிலில் சித்திரை பெருவிழாவினை முன்னிட்டு தீமிதி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதல் உடன் விழா துவங்கியது. இதனை ஒட்டி காவிரி ஆற்றங்கரையில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் சக்தி கரகம், பால்குடம் மற்றும் அலகு காவடிகள் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் மகா மாரியம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவில் வாயிலில் எழுந்தருள கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் கரகம், பால்குடம் மற்றும் அலகு காவடிகள் எடுத்து வந்த பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 20 அடி நீளம் கொண்ட அலகினை குத்தியபடி பக்தர்கள தீ மிதித்த காட்சி பக்தர்களை பக்தி பரவசமடைய செய்தது. மேலும் தீமிதி திருவிழாவை தொடர்ந்து மாரியம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.