மயிலாடுதுறை அருகே மணக்குடி கிராமத்தில் இடிந்த குடிசை வீட்டில் வாழ்ந்த முதாட்டிக்கு சுமார் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டிக் கொடுத்து புதுமனை புகுவிழா நடத்திய சமூக ஆர்வலருக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதி மோகன். இவர் தனது பெயரிலேயே பாரதி மோகன் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி கடந்த 16 ஆண்டுகளாக ஆதரவற்ற மனநிலை பாதிக்கப்பட்ட மற்றும் ஏழைகளின் நிலையில் உள்ள ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்குவதுடன், மனநலம் குன்றி சாலையில் சுற்றித்திரிவோர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு முடி திருத்தம் செய்து, புத்தாடைகள் அணிவித்து அவர்களின் நிலையை மாற்றி உறவினர்களுடன் அனுப்பியும் வைத்துள்ளார்.
மேலும், வீடு இல்லாத ஏழைகளுக்கு அறக்கட்டளை சார்பில் சமூக வலைதளங்களில் வரும் தகவலை அடுத்து வீடு கட்டியும் கொடுத்துள்ளார். இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி ஊராட்சி மேல தெருவில் வசித்து வருபவர் மூதாட்டி சுசீலா (65). கணவன் இறந்த நிலையில் தன் மகளுடன் இடிந்த நிலையில் உள்ள குடிசை வீட்டில் வசித்து வருகிறார். மேலும், இது குறித்து சமூக வலைதளங்களில் வந்த தகவலை அறிந்து இடிந்து போன குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த முதாட்டி சுசீலா என்பவரின் நிலை குறித்து அவரது கிராமத்திற்கு சென்று உண்மை நிலையை குறித்து நேரில் கேட்டறிந்தார். இதனை அடுத்து தன்னுடைய நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பங்களிப்போடு ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சீட் கொண்ட பாதுகாப்பான புதிய வீடு ஒன்றை கட்டி முடித்தார்.
அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் முதாட்டி சுசீலாவிடன் அப்பகுதி கிராம மக்கள் முன்னிலையில் புதிய வீடு ஒப்படைக்கப்பட்டு புதுமனை புகு விழாவையும் சிறப்பாக நடத்தினார். மேலும், சமூக ஆர்வலர் பாரதி மோகனின் முயற்சி கிராம மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து சமூக ஆர்வலர் பாரதிமோனை அப்பகுதி மக்கள் மனதாரப் பாராட்டினர்.