மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகும்.

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகும். இங்கு அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் உதகையில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான உதகை தலைக்குந்தா அருகே அமைந்துள்ள சூழல் சுற்றுலா மையத்திற்கு சொந்தமான பைன் பாரஸ்ட் சுற்றுலா தளத்திற்கு கேரளா, கர்நாடகா உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வருகை புரிந்து இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் அண்மைக்காலமாக அப்பகுதியில் புலி ஒன்று நடமாடி வரும் நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் சூழல் சுற்றுலா மையத்திற்கு செல்லக்கூடிய சாலையை ஒட்டி அமைந்துள்ள வனப்பகுதிக்குள் புலி ஓய்வு எடுத்திருப்பதை அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் மற்றும் ஊழியர்கள் கண்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் சூழல் சுற்றுலா மையத்தில் உலாவரும் புலி நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று மீண்டும் சூழல் சுற்றுலா மையத்தில் புலி உலா வந்ததால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சூழல் சுற்றுலா மையத்தில் புலி உலாவரும் காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டு வனத்துறை சார்பில் பைன் பாரஸ்ட் சூழல் சுற்றுலா மையம் தற்காலிகமாக மூடப்பட்டும், சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு வாகனங்கள் நிறுத்தக்கூடாது என வனத்துறையினர் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து புலியின் கால் தடங்களை வைத்து புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் பைன் பாரஸ்ட் சூழல் சுற்றுலா மையத்தை கண்டு ரசிக்க வருகை புரிந்த சுற்றுலா பயணிகள் புலி நடமாட்டத்தால் உடனடியாக வெளியேற்றப்பட்டது ஏமாற்றம் அளிப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.