மாவட்ட செய்திகள்
புதுச்சேரியிலும் வெடித்தது ஆளுநர் விவகாரம்: களமிறங்கியது இந்திய கம்யூனிஸ்ட்.

தமிழ்நாட்டில் ஆளுநர் விவகாரம் பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்திலும் ஆளுநர் விவகாரம் பேசு பொருளாகியிருக்கிறது. புதுச்சேரியின் துணைநிலை ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலத்தில் துணைநிலை ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பணியாற்றி வருகிறார். இவர் புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு போட்டியாக செயல்பட்டு வருவதாகவும், அதனால் அவரை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
புதுச்சேரி சுதேசி மில் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு உரையாற்றினார். கச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை மாற்றிட வேண்டும், நிரந்தரமான துணைநிலை ஆளுநரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
புதுச்சேரி மாநில உரிமைக்கு எதிராகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு போட்டியாகவும் தமிழிசை சவுந்தரராஜன் செயல்படுவதாகவும், புதுச்சேரி மாநில அரசியல் விவகாரங்களில் அவர் மறைமுகமாக தலையிடுவதாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை மீது குற்றம் சாட்டப்பட்டது.
தமிழ்நாடு, மேற்கு வங்கத்தை தொடர்ந்து தற்போது புதுச்சேரி மாநிலத்திலும்ஆளுநர் குறித்த சர்ச்சை எழுந்திருப்பது ஆளுநர் பதவிக்கு மீதான அதிகாரத்தை கேள்விக்குறியதாக ஆக்கி யிருக்கிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
