மாவட்ட செய்திகள்
நா.வரதன் அரசு நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா!

புதுச்சேரி பிள்ளைச்சாவடி நா. வரதன் அரசு நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழாவில் பொம்மலாட்டம் நிகழ்வு நடந்தது.
பிள்ளைச்சாவடி நா. வரதன் அரசு நடுநிலைப் பள்ளியில் சமுதாய நலப்பணித் திட்டம் மற்றும் தேசிய பசுமைப் படை இணைந்து சாலை பாதுகாப்பு , இயற்கையை காப்போம் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்த முப்பெரும் விழா நடைபெற்றது.

விழா பள்ளியின் தலைமையாசிரியர் திலகவதி தலைமையில் தமிழ்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தமிழாசிரியர் ஜெகதீசன் அனைவரையும் வரவேற்றார். இதில் போக்குவரத்து துணை ஆய்வாளர் சண்முக சத்யா மிகச் சிறப்பான முறையில் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சாலை பாதுகாப்பு பற்றிய கருத்துகளை கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் உதவி துணை ஆய்வாளர் சிவக்குமார் பள்ளியில் நடந்த சாலை விதிகள் மற்றும் குறியீடுகள் என்ற தலைப்பில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பொம்மலாட்ட நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து அரசு உயர்நிலைப்பள்ளி செல்லிப்பட்டு பட்டதாரி ஆசிரியர் சோமசுந்தரம் மாணவர்களுக்கு புத்துணர்வூட்டும் வகையில் உணவு மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தை உணரும் வகையில் பாடல், நகைச்சுவை கலந்து பொம்மலாட்டத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகள் குழுவாய் பங்குபெற்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் பொம்மலாட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இறுதியாக பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பாரதிதாசன் நன்றி கூறினார். சமுதாய நலப்பணித் திட்டத்தின் பொறுப்பாசிரியர் பெலிக்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும் தேசிய பசுமைப் படையின் பொறுப்பாசிரியர் சசி பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வழிநடத்தினார்.

முன்னதாக நண்பகல் 12 மணி அளவில் நிழல் இல்லாத நிகழ்வு குறித்த அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செல்வநாயகி, உமாமகேஸ்வரி, பிரேமானந்த் கோன் தரன், கோபாலகிருஷ்ணன், விஜயபாஸ்கர், நான்சி ரத்தினகுமாரி, உமாதேவி மற்றும் அலுவலக ஊழியர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
