மாவட்ட செய்திகள்
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கழுத்தை நெரித்து கொன்று தற்கொலை என நம்ப வைத்த மனைவி, மாமியார் மற்றும் கள்ளக்காதலன் கைது.
பழனி அருகே ஆர்.ஜி.நகரைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் செல்வராஜ். இவரது மனைவி ஜெகதா. கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி செல்வராஜ் சின்னக்கலையம்புத்தூர்&நெய்க்காரப்பட்டி சாலையில் அரிமா சங்க அலுவலகம் அருகில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக ஜெகதா பழனி தாலுகா போலீசில் அளித்த புகாரில் தனது கணவர் தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச் சென்றதாகவும், வீடு திரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் செல்வராஜின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சந்தேக வழக்காக வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் செல்வராஜ் கழுத்தை நெறித்ததால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி சத்யராஜ் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை துவக்கப்பட்டது. போலீசாரின் முதற்கட்டமாக ஜெகதாவின் செல்போன் எண்ணைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். இதன் மூலம் ஜெகதா மீது சந்தேகமடைந்த போலீசார் விசாரணை செய்ததில், ஜெகதாவிற்கும், பைனான்ஸ் தொழில் செய்து வந்த திண்டுக்கல் மாவட்டம், பித்தளைபட்டியைச் சேர்ந்த ஜெகதீஸ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது தெரியவந்தது.
மேலும், செல்வராஜ் குடித்து விட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.இதனால் ஜெகதா,அவரது தாய் ஓபுளாபுரத்தைச் சேர்ந்த ராஜம்மாள், கள்ளக்காதலன் ஜெகதீஸ் ஆகியோர் செல்வராஜை கழுத்தை நெறித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பழனி தாலுகா போலீசார் ஜெகதா, ராஜம்மாள் மற்றும் கள்ளக்காதலன் ஜெகதீஸ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.