மாவட்ட செய்திகள்
சிறுமி பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 7 ஆண்டு சிறை.

ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் அருகேயுள்ள தவளைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (38). இவர் கடந்த 15.12.2020-ம் தேதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயதுச் சிறுமியை மிட்டாய் கொடுத்து ஏமாற்றி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவ பரிசோதனையில் பாலியல் அத்துமீறல் நடந்திருப்பது உறுதியானது. பெற்றோர்கள் நடத்திய விசாரணையில், தன்னை வேலுச்சாமிதான் இவ்வாறு செய்தார் என்று அந்தச் சிறுமி சொல்லியிருக்கிறார். அதனடிப்படையில் அந்தச் சிறுமியின் பெற்றோர் பரமக்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து வேலுச்சாமியை கைதுசெய்தனர்.
இந்த வழக்கு ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுபத்ரா, வேலுச்சாமிக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூபாய் 70 ஆயிரம் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பு கூறினார். அபராதத்தை செலுத்தத் தவறினால், மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் தனது உத்தரவில் கூறியிருக்கிறார். அதேபோல, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு 1 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்குப் பரிந்துரைப்பதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
