BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

`என்எல்சியின் செயல் தங்கத்தைப் பறித்துவிட்டு பித்தளையைத் தருவது போன்றது’

`என்எல்சியின் செயல் தங்கத்தைப் பறித்துவிட்டு பித்தளையைத் தருவது போன்றது'

நெய்வேலி நிலக்கரிச் சுரங்க நிறுவனம் சார்பில் விரிவாக்கப் பணிகள் மற்றும் புதிய சுரங்கங்கள் ஆகியவற்றிற்காக நில எடுப்பு பணிகள் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. அவற்றுக்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சியும் மக்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து இருக்கிறது.

இந்நிலையில் எதிர்வரும் 27-ம் தேதியன்று மக்களை சந்தித்து மக்களின் கருத்துக்களை கேட்கப் போவதாக அறிவித்திருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து தனது முகநூலில் இன்று அவர் எழுதியிருக்கும் பதிவு:

“நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன சுரங்கங்களின் விரிவாக்கம், புதிய சுரங்கங்கள் என்ற பெயரில் கடலூர் மாவட்ட மக்களின் நிலங்களை பறிக்கும் என்.எல்.சி நிறுவனத்தின் மனிதநேயமற்ற செயல்கள் தொடர்கின்றன. தொழில்மயம் என்ற பெயரில் பூர்வகுடிமக்களின் நிலங்களை பறித்து, வாழ்வாதாரங்களை அழித்து அவர்களை வீடற்ற நாடோடிகளாக மாற்றும் முயற்சியை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது

இந்தியாவில் அதிக லாபம் ஈட்டும் நவரத்னா நிறுவனங்களில் ஒன்றாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வளர்ச்சியடைந்திருக்கிறது. என்.எல்.சி நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்குக் காரணம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான 37,256 ஏக்கர் நிலங்களை வழங்கிய மக்கள் தான். மக்களின் நிலங்களை மூலதனமாக வைத்து என்.எல்.சி நிறுவனம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், அதற்குக் காரணமான மக்கள் என்.எல்.சி நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருப்பதற்கு பதிலாக, தொழிலாளர்களாகக்கூட பணியில் சேர முடியாமல், தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்து வாழ்வாதாரம் இழந்தோரின் பிரச்சினைகளுக்கே இன்னும் தீர்வு காணப்படாத நிலையில், அடுத்தக்கட்டமாக 49 கிராமங்களில் இருந்து 25,000-க்கும் கூடுதலான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி நிறுவனம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முதல் சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக 9 கிராமங்களில் இருந்து 3000-க்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக 25 கிராமங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்து 15 ஆண்டுக்கு முன் குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட 10,000 ஏக்கரும் இப்போது பறிக்கப்படவுள்ளன.

இவை தவிர மூன்றாவது சுரங்கத்திற்காக கொளப்பாக்கம், அரசகுழி, சிறுவரப்பூர், உள்ளிட்ட 26 கிராமங்களில் உள்ள 12,125 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. இவற்றின் மொத்தப் பரப்பு இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் பரப்பில் சுமார் நான்கில் மூன்று பங்காகும்.

நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்காக இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, ஏக்கருக்கு முதலில் சில ஆயிரங்கள், அண்மைக்காலமாக சில லட்சங்கள் என்ற அளவில் தான் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இப்போதும் கூட மூன்றாவது நிலக்கரி சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள விளை நிலங்களுக்கு மிகக் குறைந்த தொகையை இழப்பீடாக வழங்கப்படும் என்று என்.எல்.சி அறிவித்துள்ளது.

தங்கத்தைப் பறித்துக் கொண்டு, அதற்கு மாற்றாக பித்தளையைத் தருவது போன்ற இத்திட்டங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. மூன்றாவது சுரங்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்தக்கூடாது. இரண்டாம் சுரங்க விரிவாக்கத்திற்காக 25 கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட 10,000 ஏக்கர் நிலங்களை திரும்ப ஒப்படைத்து விட்டு என்.எல்.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்பது தான் கடலூர் மாவட்ட மக்களின் முழக்கமாக உள்ளது.

இந்த விஷயத்தில் மக்களுக்கு துணையாக இருக்க வேண்டிய தமிழக அரசு, மக்களை கைவிட்டுவிட்டு என்.எல்.சி நிறுவனத்திற்கு தூதராக நின்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தொடங்கப்படுவதற்கு முன் கடலூர் மாவட்டத்தில் 8 அடியில் நிலத்தடி நீர் கிடைத்தது. ஆனால், இப்போது நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழ் சென்றுவிட்டது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் உள்ளூர் மக்களின் நலன்களை பாதுகாக்க ஒருபோதும் விரும்பியதில்லை என்பது அனைவரும் அறிந்தது தான். அந்த நிறுவனத்தால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவர்களின் பாதுகாவலனாக பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது. நெய்வேலி முதல் இரு நிலக்கரி சுரங்க விரிவாக்கம், மூன்றாவது நிலக்கரி சுரங்கம் ஆகியவை குறித்த மக்களின் கோரிக்கைகள், நிலைப்பாடுகளை மத்திய, மாநில அரசுகளுக்கு கொண்டு சென்று தீர்வு காணவும், அதற்காக கடுமையாக போராடவும் பா.ம.க. தயாராக இருக்கிறது.

என்.எல்.சி நிறுவனத்தால் பாதிக்கப்படும் மக்களைக் காப்பதற்கான இயக்கத்தின் முதல்கட்டமாக பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படக்கூடிய மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கருத்துகளை அறிய முடிவு செய்திருக்கிறேன். அதற்காக கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதி, கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவரப்பூர் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 27-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதில் நான் பங்கேற்று மக்களின் கருத்துகளை அறிந்து கொள்ளவிருக்கிறேன்.

இந்தக் கூட்டத்தில் மக்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் உள்ளிட்ட பா.ம.க.வின் துணை அமைப்புகள் கலந்து கொள்ளும். பொதுமக்களும், வேளாண் பெருங்குடி மக்களும் பெருமளவில் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )