மாவட்ட செய்திகள்
எடப்பாடி மீது வழக்கு ஏன்?

தமிழ்நாடு முழுவதும் 50 விழுக்காடு முதல் 150 விழுக்காடு வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வுக்குக் காரணமான திமுக அரசை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கடந்த 5-ம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் எதிர்கட்சி தலைவரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவருடன் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மாநில அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
இந்நிலையில் இதுகுறித்து திருச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஐயாயிரம் பேர் மீது சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல், உத்தரவிற்கு கீழ்படியாமை, பொதுப்பாதையில் போக்குவரத்துக்கு இடையூறாக கூடியது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் திருச்சி கண்டோன்மென்ட் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
