கமல்ஹாசன் உருக்கமான கடிதம்! கண் கலங்கிய லோகேஷ்!

மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘விக்ரம்’. இந்த படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த 3-ம் தேதி வெளியாகிய நிலையில், இதுவரை 125 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் கமலின் தீவர ரசிகரான இயக்குநர் லோகேஷ் கனகராஜை பாராட்டி கமல்ஹாசன் தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள லோகேஷ், லைப் டைம் செட்டிலுமெண்ட் லெட்டர் என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு இதை படித்த நான் எவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. நன்றி ஆண்டவரே. என பதிவிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில், “அன்பு லோகேஷ், பெயருக்கு முன்பு திரு போடாமல் விட்டது விபத்தல்ல. திரு கனகராஜ் அவர்களுக்கு உங்கள் பால் உள்ள உரிமையை உங்களைக் கேட்காமலேயே நான் எடுத்துக் கொண்டு விட்டேன். இது நமக்கு தனிப்பட்ட கடிதம் என்பதால். மற்றபடி உங்கள் சாதனைக்கான பதவிக்கான மரியாதை பழையபடியே தொடரும். பொதுவெளியில் எனது ரசிகர்கள் மற்றவர்களைவிட வித்தியாசமானவராக இருப்பது அவசியம் என்ற என் ஆசை பேராசை என்றனர், எனது விமர்சகர்கள். ஆனால் அதையும் தாண்டி என் முன்னணி ரசிகர் முன்னணி திறமையாளர் ஆகவும் இருப்பது தான் ஆசைப்பட்டதை விட அதிகம்.

உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று நான் உட்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம். யூடியூப் ஐ திறந்தால் வார்த்தைகளின் களஞ்சியமே தென்படும். அதிலுள்ள திரு லோகேஷ் கனகராஜ் தோத்திர மாலையிலிருந்து யார் வேண்டுமானாலும் வார்த்தை மலர்களை எடுத்துக் கொள்ளலாம். இவைகளெல்லாம் தொடர வாழ்த்துக்கள். அயராது விழித்திருங்கள், தனித்திருங்கள், பசித்திருங்கள். உங்கள் அன்ன பாத்திரம் என்றும் நிறைந்திருக்கும். உங்கள் நான் கமல்ஹாசன் என எழுதியுள்ளார்.
