கும்பகோணத்தில் 12 சிவாலயங்களின் சார்பில் ஆருத்ரா தரிசன விழா.

சிவபெருமானின் தெய்வீக நர்த்தன தரிசனத்தை உலக மக்கள் கொண்டாடி வணங்கும் நாள் இது மார்கழி மாதத்தின் பெளர்ணமி நன்னாளில், திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜ பெருமானின் தரிசனம் காண்பதை ஆருத்ரா தரிசனம் என்றழைக்கிறோம்.
இந்த புண்ணிய நாளில் அனைத்து சிவாலயங்களிலும் உள்ள நடராஜர் திருவுருவத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம்.
கும்பகோணத்தில் புகழ்பெற்ற மாசி மகாமகம் தொடர்புடைய 12 சிவாலயங்களின் சார்பில் இன்று காலை 9 மணி அளவில் மார்கழி திருவாதிரையை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் மற்றும் இரட்டை வீதி உலா சாமி புறப்பாடு நடந்தது.
கும்பகோணத்தில் உள்ள புகழ்பெற்ற ஆதி கும்பேஸ்வரர் சுவாமி உட்பட 12 சிவாலயங்கள் மாசி மகம் மற்றும் மகாமகம் திருவிழாவுடன் தொடர்புடையது. ஆண்டுதோறும் மாசி மகத்தின் போது 12 சிவாலயங்களில் பஞ்சமூர்த்தி சுவாமிகளும் மகாமகம் குலத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் அருளுகின்றனர்.
அதே போல மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் 12 சிவாலயங்களின் சார்பில் ஆருத்ரா தரிசன விழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறுகிறது.
அது சமயம் வழக்கமாக நடைபெறும் ஒரு வீதி உலா மட்டும் இல்லாமல் இரட்டை வீதியுலா நடைபெறுவது சிறப்புக்குரியது, இதனால் எல்லா கோயில் சுவாமியும் எல்லா கோவில் வீதிகளுக்கும் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் கும்பேஸ்வரர் சுவாமி கோயில் வீதியிலும், நாகேஸ்வர சுவாமி கோயில் வீதியிலும் ஒரே நேரத்தில் 12 சிவாலயங்களில் உற்சவர் நடராஜர், சிவகாமி அம்மன், பீடாஹாரி காளியம்மன் சுவாமிகளும் ஒரு சேர எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இதில் ஆதி கும்பேஸ்வரர், கொட்டையூர் கோடீஸ்வரர், மடத்து தெரு காளஹஸ்தீஸ்வரர், நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், காசி விஸ்வநாதர், கம்பட்ட விஸ்வநாதர், வியாழ சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், சாக்கோட்டை அமிர்தகலசநாதர் ஆகிய 12 சிவாலயங்களில் நடராஜ மூர்த்திகள் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் அளித்தனர்.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அந்தந்த கோயில் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இது போல் நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தேவாரப்பாடல் பெற்ற தலமாகும், ஆதிசேஷன் இங்கு மாசி மாத மகா சிவராத்திரி நாளில் முதல் காலத்தில் வழிபாடு செய்து இழந்த தன் சக்தியை பெற்றார் சூரிய பகவான் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் தன் ஒளிக்கதிர்களால் வழிபாடு செய்யும் தலமாகவும் இது விளங்குகிறது.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இவ்வாலயத்தில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு
சிவகாமி நடராஜ பெருமானுக்கு திரவிய பொடி மாப்பொடி மஞ்சள் பொடி பால் தயிர் சந்தனம் இளநீர் பஞ்சாமிர்தம் விபூதி சந்தனம் உள்ளிட்ட பலவிதமான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும்,
அதனைத் தொடர்ந்து புனிதநீர் நிரம்பிய கடநீரை கொண்டு கட அபிஷேகமும் நடைபெற்ற பிறகு சிறப்பு அலங்காரத்தில் அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.