தலைப்பு செய்திகள்
இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தி.மு.க. எம்.பி.க்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள்: திமுக தலைமை அறிவிப்பு.

இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தி.மு.க. எம்.பி.க்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என திமுக தலைமை அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் வாடும் இலங்கை மக்களுக்கு உதவ தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, இலங்கை மக்களுக்கு உதவ அனுமதி கோரி, ஒன்றிய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அனுமதியளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, முதற்கட்டமாக, 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளைத் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசின் அனுமதியுடன் விரைவில் அனுப்பவுள்ளோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இத்துடன், திராவிட முன்னேற்றக் கழகச் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்’’ என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் 3-5-2022 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திராவிட முன்னேற்ற கழக பாராளுமன்ற மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
