மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறையில் கவிஞர் வேதநாயகம் பிள்ளைக்கு அரங்கம் மற்றும் சிலை அமைக்க அறிவிப்பு செய்த தமிழக அரசுக்கு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு நன்றி.

மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர். டாக்டர். இராம. சேயோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழில் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் எழுதிய மாயூரம் முன்சிப் கவிஞர் வேதநாயகம் பிள்ளை அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மூன்று கோடி ருபாய் செலவில் மயிலாடுதுறையில் அரங்கம் மற்றும் சிலை அமைக்க தமிழக அரசின் சார்பில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் இன்று தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார்.
மயிலாடுதுறை மக்களின் நீண்டகால கோரிக்கை.
கடந்த பத்து ஆண்டுகளாக தமிழக அரசிடம் வழக்கறிஞர்கள் கவிஞர் வேதநாயகம் பிள்ளைக்கு சிலை அமைக்க தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம். மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கடந்த 2015-ல் திறக்கப்பட்டபோது தமிழக அரசிடம் மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால் கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தை ஆண்டவர்கள் அந்த கோரிக்கைக்கு செவிமடுக்கவில்லை.
திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை சட்டமன்ற தேர்தலுக்காக வெளியிடுவதற்கு முன் மயிலாடுதுறையில் நடைபெற்ற தி.மு.க. தேர்தல் அறிக்கை ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவிடம் மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் சார்பில் கோரிக்கை விடுத்தோம். தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் தெரிவித்து தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஆர்.பாலு உறுதி அளித்தார். அதன்படி தற்பொழுது தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவுப்படி மயிலாடுதுறையில் கவிஞர் வேதநாயகம் பிள்ளைக்கு அரங்கம் மற்றும் சிலை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கு மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தனது நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறது.
பட்டினியால் வாடிய மயிலாடுதுறை மக்களுக்கு தனது சம்பளத்தின் மூலம் பஞ்சகாலத்தில் கஞ்சி வார்த்த பெருமனிதர்தான் கவிஞர் வேதநாயகம் பிள்ளை. கிறிஸ்துவராக பிறந்தாலும் திருவாவடுதுறை ஆதீனத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டு மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக திகழ்ந்தவர். அவருக்கு அரங்கம் மற்றும் சிலை அமைப்பதன் மூலம் தமிழக அரசு பெருமைப்படுத்தியுள்ளதை மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வரவேற்கிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
