மாவட்ட செய்திகள்
திருச்சி, அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பணிபுரிந்து நீக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு பணி வழங்க வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் அரசு மருத்துவமனையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாள்கள் பணிபுரிந்து வந்தனர். கொரோனா நோய் தொற்று காலத்திலும் பணியாற்றினர். இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்16ஆம் தேதி முதல்
28தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மீண்டும் வேலை வழங்க கோரி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மருத்துவமனை முதல்வர் அலுவலகத்தை சிஐடியு மாநகர் மாவட்ட தலைவர் ராமர் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்து முற்றுகையிட்டவர்களிடம் அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று தெரிவித்தனர். இதன் காரணமாக சிறிது நேரம் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து மருத்துவமனை இருக்கை மருத்துவர் சித்ரா, உதவி இருக்கை மருத்துவர் குமரேசன் மற்றும் மகாலட்சுமி ஆகியோரிடம் சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜன், மாவட்ட தலைவர் ராமு நிர்வாகி மணிமாறன் ஆகியோர் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை முடிவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்து அடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தில் சிஐடியூ நிர்வாகிகள் செல்வி, ஜெயபால், கருணாநிதி, ஒப்பந்த தொழிலாளர் சங்க செயலாளர் கார்த்திகேயன், ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முற்றுகைப் போராட்டத்தையொட்டி ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
