மாவட்ட செய்திகள்
பஞ்சு பதுங்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்குமா அரசு?

திருப்பூரில் பிரமாண்டமான தொழில் வளர்ச்சி என்பது திருப்பூர் வாழ் மக்களின் கடுமையான உழைப்பினால் தானாக உருவான வளர்ச்சி. இந்த ஊரில் இருக்கும் அனைத்து சார் தொழில்களும், கடைகளும், வாடகை வருமானம் உள்ளிட்ட அனைத்து இதர வருமானங்களும் உயர்வோ, வீழ்ச்சியோ அனைத்தும் பின்னலாடை தொழிலை நம்பியே உள்ளது.
திருப்பூர் பின்னலாடை தொழிலை நம்பி பல லட்சம் குடும்பங்கள் பிழைத்து வருகின்றன. யார் எப்பொழுது வந்தாலும் வேலை கிடைக்கும் என்ற உறுதியான சூழ்நிலை திருப்பூரில் மட்டுமே உள்ளது. பல லட்சம் பேருக்கு கை நிறைய வருமானமும் அள்ளி தருகின்றது.
இத்தகைய சூழலில் பணத்தாசை பிடித்த கும்பலால் பஞ்சு பதுக்கப்பட்டு அதனால் நூல் விலை கட்டுக்கடங்காது விலை எறிவருகின்றது. ஏற்கனவே கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வால் உற்பத்தி செலவுகள் அதிகமாகி வருகின்றது. இத்துடன் நூல்விலை உயர்வும் சேர்ந்து பின்னலாடை உற்பத்தி செலவு அதிகம் ஆவதால் மற்ற நாடுகளுடன் போட்டிபோட்டு வெளிநாட்டு வர்த்தகர்களிடம் வணிகம் பெற இயலாத சூழ்நிலை உருவாக்கி உள்ளது.
இப்படியே போனால் திருப்பூர் பின்னலாடை தொழில் முற்றிலும் நசிந்துவிடும். பல லட்சம் பேர் வேலைவாய்ப்புகள், சுயதொழில் வாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்படும்.
வெறும் சில ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் தரும் கார் உற்பத்தி நிறுவனங்கள், செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகளையும், உதவிகளையும் நமது அரசுகள் அள்ளி அள்ளி தருகின்றன.
அவற்றுக்கு ஒரு பிரச்னை என்றால் உடனே எல்லா அரசியல்வாதிகளும் களத்தில் இறங்கி போராட முன்வருகின்றன. ஆனால் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் தரும் திருப்பூருக்கு ஒரு பிரச்னை என்றால் அதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல இருக்கிறார்கள்.
எனவே மத்திய அரசு இதில் உடனடியாக தலையிட்டு பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்து தற்காலிக தடை விதிக்க வேண்டும். உள்நாட்டு தேவை போக மீதம் இருப்பவற்றை மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும்.
பஞ்சை ஏற்றுமதி செய்வதை விட அதற்கு மதிப்புகூட்டி ஆடைகளாக ஏற்றுமதி செய்யும்பொழுது பலமடங்கு அதிக அன்னியசெலவானியை பெறமுடியும்.
எனவே பஞ்சை அத்தியாவசிய பட்டியலில் மீண்டும் சேர்த்து பதுக்கலுக்கு நிரந்தர முடிவு கட்டவேண்டும்.
இதற்காக கட்சிவேறுபாடுகள், தொழிற்சங்கங்கள், தொழில் அமைப்புகள் வேறுபாடுகள் அனைத்தையும் மறந்து, இது நம்ம ஊர் பிரச்னை… நமது வாழ்க்கை பிரச்னை… இப்போ இல்லையென்றால் எப்போதும் இல்லை என்பதை உணர்ந்து …. அனைவரும் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தங்கள் தரவேண்டும். இல்லையெனில் திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி தொழிலை அழித்த பாவம் எல்லோருக்கும் வந்து சேரும்.
இவ்வாறு க.கோபாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
