BREAKING NEWS

வேலூரில் தொடர்ந்து தோல்வியை தழுவும் மூத்த அரசியல்வாதி ஏசிஎஸ்!

வேலூரில் தொடர்ந்து தோல்வியை தழுவும் மூத்த அரசியல்வாதி ஏசிஎஸ்!

வேலூர் மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் பிரச்சாரம் செய்தும் தொடர்ந்து 3முறையாக தோல்வியை பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் தழுவியுள்ளார். இது அதிர்ச்சி தரக்கூடிய தோல்வியாக அமைந்துள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க வேலூர் மக்களவைத் தொகுதியில் இதுவரை ஐந்து முறை திமுகவும், காங்கிரஸ் மூன்று முறையும், அதிமுக மற்றும் பாமக இரண்டு முறையும் வென்றுள்ளன. இதுவரை இந்த தொகுதியில் மட்டும் கூட்டணி கட்சி சார்பில் ஆறு இஸ்லாமிய வேட்பாளர்கள் வென்றுள்ளனர்.

2009 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுகவின் அப்துல் ரகுமான் வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளர் செங்குட்டுவன் வெற்றி பெற்றார். திமுக கூட்டணி வேட்பாளர் அப்துல் ரகுமான அப்போது தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் புதிய நீதி கட்சி நிறுவனர் ஏ.சி. சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார். இதனால் மும்முனையாக கடும் போட்டி நிலவியது.இதில் கடைசியில் ஏ.சி. சண்முகம் தோல்வியடைந்தார். இதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.

2014 ஆம் ஆண்டு பாஜக கூட்டணியில் போட்டியிட்ட ஏ.சி. சண்முகம் அதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்தில் களமிறங்கினார். அப்போது ஏ.சி. சண்முகம் வெற்றி வாய்ப்பை எட்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இழந்தார். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி கட்சி சார்பில் மீண்டும் புதிய நீதி கட்சி நிறுவனர் ஏ.சி. சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார். எப்படியாவது இந்த முறை வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் முழு முனைப்போடு முழு வீச்சில் தனது தேர்தல் பணியை தொடங்கினார். இதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதமே தேர்தல் பிரச்சாரம் தொடங்கினார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அழைத்து வந்து பள்ளிகொண்டாவில் பொதுக்கூட்டமும் நடத்தினார்.

தொடர்ந்து வேலூர் மக்களவைத் தொகுதியில் பல்வேறு வகையான முகாம்களை நடத்தி தேர்தல் பணிகளில் ஈடுபட்டார். தேர்தல் தேதி அறிவித்ததுடன் பாஜகவுடன் கூட்டணியில் மூன்றாவது முறையாக வேலூர் மக்களவைத் தொகுதியில் ஏ.சி. சண்முகம் களம் கண்டார். இந்த முறை பாஜக, பாமக, அமமுக ,ஓபிஎஸ் அணி, ஜான்பாண்டியன் உட்பட கட்சிகளின் ஆதரவுடன் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து மீண்டும் திமுக சார்பில் சிட்டிங் எம்பியான கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அதிமுக சார்பில் பசுபதி போட்டியிட்டார். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்தது.

ஒவ்வொரு நாளும் தேர்தல் பிரச்சாரங்கள் அனல் பறந்தது. ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து பிரதமர் மோடி வேலூர் கோட்டை மைதானத்தில் அவருக்கு பிரச்சாரம் மேற்கொண்டார். பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டதால் இந்த முறை வெற்றி நிச்சயம் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் இருந்தனர். இந்நிலையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தது. அதில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். ஏ.சி .சண்முகம் மூன்றாவது முறையாக தோல்வியடைந்தார். அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

மூன்று முறை போட்டியிட்ட ஏ.சி. சண்முகம் ஒவ்வொரு முறையும் கூட்டணியை மாற்றி போட்டியிட்டதால் அவர் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறார். ஒவ்வொரு முறையும் கூட்டணி கட்சியை நம்பியே அவர் களம் கண்டு வருகிறார். பாஜக தன்னை வளர்த்த கட்சியாக மாற்றிவிட்டதாகவும் அனைத்து இடங்களிலும் பூத் கமிட்டி உள்ளதாகவும் கூறி இருந்தனர். ஆனால் பல இடங்களில் பூத்கமிட்டியே இல்லாமல் இருப்பது இந்த தேர்தலில் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

முக்கிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் கூட பூஜ்ஜியம், ஒற்றை, இரட்டை இலக்கு வாக்குகள்தான் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர், பிற கூட்டணி கட்சி தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மாறாக கடந்த இரண்டு முறை நடந்த தேர்தலை விட இந்த முறை ஏ.சி. சண்முகம் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் யாரிடமும் எதுவும் கேட்காமல் அவருக்கு விருப்பப்பட்டது போல பணத்தை வாரி இறைத்து வந்தார். அவரவர்களும் பணத்தை செலவு செய்யாமல் அப்படியே அழுத்திக் கொண்டனர். குறிப்பாக பாஜக மாவட்ட தலைவர் மனோகரன், பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகன் ஆகியோர இதற்கு முழு முதல் காரணம் என்று கூறப்படுகிறது. இவர்கள் மீது பாஜக தலைமை உரிய விசாரணை நடத்தி வேலூர் மாவட்டத்தில் உள்ள பாஜக நிர்வாகிகளை கூண்டோடு மாற்றி விட்டு புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்றும் அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கமலாலயம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

CATEGORIES
TAGS