அரசு பள்ளி ஆசிரியர் வேகமாக டை கட்டுவதில் கின்னஸ் சாதனை.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் ஏற்காடு அரசு பள்ளி ஆசிரியர் வேகமாக டை கட்டுவதில் முன்பு இருந்த கின்னஸ் சாதனையை முறியடித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் சதீஷ் ராஜ்,36. இவர் ஏற்காடு நல்லூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஏற்காடு தனியார் தங்கும் விடுதி கூட்ட அரங்கில் மிக வேகமாக டை கட்டி கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்ச்சி இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக ஏற்காடு அரசு மருத்துவர்கள் தாம்சன் மற்றும் பிரியதர்சினி ஆகியோரும் நேரம் காப்பாளர்களாக தனியார் பள்ளி விளையாட்டு பயிற்சியாளர்கள் பாண்டியன் மற்றும் ஜெயக்குமாரும் இருந்தனர். ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு நாக்பூரை சேர்ந்த தீபக் சர்மா என்பவர் 12.89 நொடிகளில் தனது கழுத்தில் டை காட்டியதே கின்னஸ் சாதனையாக இருந்தது.
இந்த சாதனையை முறியடிக்கும் விதமாக நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சதிஷ் ராஜ் 11.55 வினாடிகளில் தனது கழுத்தில் டை கட்டி முடித்து தீபக் சர்மாவின் கின்னஸ் சாதனையை முறியடித்தார்.
இந்த சாதனை குறித்து சதீஷ் ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது..
எனது மகன் பள்ளிக்கு செல்லும் போது அவருக்கு நான் தான் தினமும் டை கட்டிவிடுவேன். அப்போது அவருக்கு மிக வேகமாக டை கட்டிவிடுவதை கண்ட எனது மனைவி நீங்கள் வேகமாக டை கட்டுகிறீர்கள்.
இதையே ஒரு சாதனையாக செய்யலாம் என்று என்னிடம் கூறினார். அதனை தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக வேகமாக டை கட்டும் பயிற்சியை செய்து வந்தேன். இந்த பயிற்சியின் மூலம் ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு நாக்பூரை சேர்ந்த தீபக் சர்மா என்பவர் 12.89 நொடிகளில் தனது கழுத்தில் டை கட்டிய கின்னஸ் சாதனையை முறியடித்து…
இன்று 11.55 நொடிகளில் எனது கழுத்தில் டை கட்டியது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எனது மனைவி கூறிய அந்த வார்த்தை தான் இந்த சாதனைக்கு காரணம் என்று கூறினார்.