உடுமலை பூட்டியே கிடக்கும் நகராட்சி சிறுவர் பூங்கா பராமரிக்கப்படாததால் புதர் மண்டி அவலம்.

உடுமலை, நகராட்சி அண்ணா சிறுவர் பூங்கா, பயன்பாடில்லாமல் பூட்டியே கிடப்பதால், ‘குடிமகன்களின்’ பாராக மாறுகிறது.உடுமலை பார்க் ரோட்டில், நகராட்சிக்கு சொந்தமான, அண்ணா சிறுவர் பூங்கா உள்ளது. பழமையான இந்த பூங்காவை பராமரிக்காமல் விட்டதால், புதர் மண்டி பாழடைந்த நிலையில் இருந்தது.பூங்காவில், உள்ள விளையாட்டு தளவாடங்கள் துருப்பிடித்தும், ஆபத்தான நிலையிலும் இருந்தன.


பயன்படுத்த அனுமதி இல்லாத நிலையிலும், விடுமுறை நாட்களின் போது, குழந்தைகள் உள்ளே நுழைந்து விளையாடுவதும் நடக்கிறது.உடுமலை சுற்றுப்பகுதி தன்னார்வல அமைப்புகளின் சார்பில், பூங்கா முழுவதும் துாய்மைபடுத்தப்பட்டு, தளவாடங்கள் புதிதாக அமைப்பதற்கும் ஏற்பாடு செய்ய திட்டமிட்டனர். இதனால், நகர மக்களும் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.நகராட்சி நிர்வாகமும் எந்த முயற்சியும் எடுக்காததால், தன்னார்வல அமைப்புகளின் சார்பிலும், மேம்பாட்டுப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படவில்லை. ஆர்வத்தோடு காத்திருந்த குழந்தைகளும் ஏமாற்றத்தோடு உள்ளனர்.
இதனால், மீண்டும் பயன்பாடில்லாமல் பூங்கா பூட்டிய நிலையில் உள்ளது. பார்க் ரோடு அருகில், ‘டாஸ்மாக்’ கடை உள்ளது. பலரும், இங்கு மது அருந்திவிட்டு, பூங்காவை இளைப்பாறும் இடமாக பயன்படுத்துகின்றனர்.விடுமுறை நாட்களில், பூங்காவின் அருகில் குடிமகன்கள், நிலையில்லாமல் அரைகுறையான ஆடையுடன் படுத்துக்கிடப்பதும், பொதுமக்களை பெரிதும் முகம் சுழிக்க வைக்கிறது. மாலை நேரங்களில் அவ்வழியாக செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர்.பூங்காவை, மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதோடு, பாதுகாவலர் நியமிக்கவும், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
