ஏ.சித்தூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் வட்டார தொழில்நுட்ப குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ஏ.சித்தூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை குழு கூட்டம் மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வட்டார தொழில்நுட்பக் குழு தலைவரும் திமுக ஒன்றிய செயலாளருமான பாவாடை கோவிந்தசாமி தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் ராஜசேகரன் வரவேற்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மத்தியில் பேசிய வட்டார தொழில்நுட்ப குழு தலைவர் பாவாடை கோவிந்தசாமி வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த அதிகாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும்,
உழவர் நண்பன் செயலியை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்றும், அதிகாரிகள் குறித்த நேரத்தில் அலுவலகத்திற்கு வரவேண்டும், அலுவலகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்,
ஆத்மா குழு உறுப்பினர்களுக்கு வேளாண் அலுவலகத்தில் தனி அறை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும், வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் விவசாயி ஒருவர் எழுந்து வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து நெல் பயிரிட போதுமான அளவு நீர் திறந்து விட வேண்டும் என்றும் சாகுபடி செய்யப்படும் நெல்லை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
கோரிக்கைக்கு பதில் அளித்து பேசிய வேளாண்மை உதவி இயக்குனர் ராஜசேகரன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
மேலும் இக்கூட்டத்தில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பாக்கியராஜ், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் சரவணன், இளையராஜா, உதவி வேளாண்மை அலுவலர் விக்னேஷ், மற்றும் ஆத்மா குழு உறுப்பினர் கனல் குணா மற்றும் உறுப்பினர்கள், விவசாயிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.