கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கிடா வெட்டி, பிரியாணி விருந்து நடத்திய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள்.

கரூர் மாவட்டம் குளித்தலையில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறக்கப்பட்ட பிறகு குளித்தலை அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குளித்தலை வட்டாரம் மட்டும் இன்றி அருகில் உள்ள திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட முசிறி, மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.


அவசர விபத்து சிகிச்சை பிரிவும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களும், பணியாளர்களுக்கும் விபத்து அடிக்கடி ஏற்படுவதாகவும், அனைவருக்கும் பணிச்சுமை அதிகளவில் இருப்பதால் மனஅழுத்தம் ஏற்படுவதாகவும் அவற்றை நிவர்த்தி செய்ய மருத்துவமனை வளாகத்தில் உள்ள சாமிக்கு கிடா வெட்டி பலி கொடுக்க முடிவு செய்யப்பட்டதாகவும், அதற்காக மருத்துவமனையில் பணியாற்றும் ஒவ்வொருவரிடமும் தலா 300 ரூபாய் வசூல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து இன்று மதியம் கோவில் வளாகத்தில் உள்ள சாமிக்கு கிடா வெட்டியதுடன், அதன் கறியை மருத்துவமனை வளாகத்தில் அடுப்பு மூட்டி, ராட்சத பாத்திரம் மூலம் பிரியாணி சமைக்கப்பட்டது.
அவற்றை சக ஊழியர்கள், மருத்துவர்கள், செவியர்கள் என அனைவரும் உண்டு மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளனர். அப்போது பலரும் செல்போன் மூலம் புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் சமூக ஊடகங்கள் மூலமாக மருத்துவத் துறையினரை தாண்டி வெளி ஆட்களுக்கும் வந்தது. அவற்றை பார்த்த பொதுமக்கள் சிகிச்சைக்கு வந்தால் முறையாக சிகிச்சை அளிப்பதில்லை, பணி நேரத்தில் இது போன்று அரசு மருத்துவமனையில் தவறான பயன்பாட்டிற்கு மருத்துவ துறையினர் பயன்படுத்தியுள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்தது.
இந்த நிலையில் இந்த புகைப்படங்களும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. திமுக முன்னாள் தலைவர் கலைஞரின் முதல் தொகுதியான குளித்தலை தொகுதியில் ஆசிரியர்கள் கேக் ஊட்டிக் கொண்ட சம்பவம் தொடர்பாக 2 ஆசிரியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மருத்துவர்கள் இந்த செயலால் பல விமர்சனங்கள் எழுந்துள்ளது
