கரைந்து போன `அண்ணா திராவிடர் கழகம்’ சசிகலாவுடன் ஐக்கியமானார் சகோதரர் திவாகரன்.

சசிகலாவின் தம்பி திவாகரன் தோற்றுவித்த அண்ணா திராவிடர் கழகம் என்ற அரசியல் கட்சி நீர்க்குமிழி போல தோன்றிய வேகத்தில் அமிழ்ந்து போனது. தஞ்சையில் இன்று நடந்த விழாவில், தனது அண்ணா திராவிடர் கழகத்தை சசிகலாவோடு இணைத்திருக்கிறார் திவாகரன்.

நடராஜன் மனைவி சசிகலாவின் சகோதரர் திவாகரன், அதிமுகவின் நிழல் மனிதராக விளங்கியவர். தனது சகோதரி சசிகலா ஜெயலலிதாவோடு நெருக்கமாக இருப்பதை பயன்படுத்தி அதிமுகவின் சக்தி மிக்க மனிதராக அவர் விளங்கினார். முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், வைத்திலிங்கம் தொடங்கி டெல்டா மாவட்டத்தில் உள்ள அத்தனை அதிமுககாரர்களையும் அவர் கையில் வைத்திருந்தார்.
அவர் கைகாட்டுகிறவர்களுக்கு அதிமுகவில் எம்எல்ஏ, எம்பி சீட்டுக்கள் வழங்கப்பட்டது. அவரால் சுட்டிக் காட்டப்படுகிறவர்களே அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதற்கு பிரதிபலனாக அவர்கள் பெற்றுக் கொண்டது ஏராளம் என்று சொல்வார்கள். இப்படி சக்தி வாய்ந்த மனிதராக இருந்தவருக்கு அதிமுகவில் சசிகலாவுக்கு இக்கட்டான நேரம் வந்தபோது அவருக்கும் கஷ்ட காலம் வந்தது.
அதிமுகவில் இருந்து சசிகலா ஓரம் கட்டப்பட்டதும் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும், சசிகலாவின் அக்காள் மகனான டி.டி.வி.தினகரனுக்கும் மோதல் ஏற்பட்டது. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கினார். அதனையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு மன்னார்குடியில் திவாகரன் ‘அண்ணா திராவிட கழகம்’ என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியின் பொதுச் செயலாளராக அவரே இருந்தார்.

