காதல் விவகாரம், அச்சங்குளம் அருகே மீன் வியாபாரியை அடித்து கொலை செய்து காட்டுப்பகுதியில் உடல் எரிப்பு – மகளுடன் சேர்ந்து மனைவி வெறிச்செயல் : மகளின் காதலன் உட்பட 3பேர் கைது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள அச்சங்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் தீ எரிந்த கொண்டிருந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில், பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மற்றும் மணியாச்சி டி.எஸ்.பி.லோகேஸ்வரன் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வயிட்டனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய பசுவந்தனை போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
விசாரணையில், தீ வைத்து எரிக்கப்பட்டவர் கோவில்பட்டி அருகேயுள்ள குருவிநத்தம் தெற்கு தெருவை சேர்ந்த சவரிமுத்து மகன் மீன் வியாபாரி ஞானசேகர்(42) என்பது தெரியவந்தது.
இதையடுத்து குருவிநத்தம் சென்று, ஞானசேகர் மனைவி சலைத்ராணி(38) மற்றும் அவர்களது 15, 14 வயது இரண்டு மகள்களிடம் விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், அதே ஊரைச்சேர்ந்த கார்பெண்டர் வேலை செய்து வரும் சுடலையாண்டி மகன் கருப்பசாமி என்ற கார்த்திக் (24) என்பவர் ஞானசேகரின் மூத்த மகளை காதலித்துள்ளார்.
மேலும் கார்த்திக் சலைத்ராணியுடனும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த ஞானசேகர் மனைவியையும், மகளையும் கண்டித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சலைத்ராணிக்கும், ஞானசேகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவர், அவரது மகள்கள் மற்றும் கார்த்திக் ஆகியோர் சேர்ந்து, ஞானசேகரை கம்பி மற்றும் அரிவாளால் தாக்கி, கொலை செய்துள்ளனர்.
பின்னர் அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி, காரில் ஏற்றி அச்சங்குளம் காட்டுப்பகுதியில் கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடியதாக கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக போலீஸார் கொலை வழக்குப்பதிவு, கார்த்திக், சலைத்ராணி, அவரது மகள் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தாயுடன் மகள் சேர்ந்து தகப்பனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.