காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேர்மையை போற்றும் வகையில் பாபநாசத்தில் ஆள் இல்லாத கடை வியாபாரம்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் காந்தி ஜெயந்தி 154வது விழாவை முன்னிட்டு நேர்மை விழிப்புணர்வு நாளை போற்றும் வகையில், பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில் ஆள் இல்லாத கடை பழைய பேருந்து நிலையத்தில் திறக்கப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டது. ரோட்டரி சங்க தலைவர் அறிவழகன் தலைமையில் பாபநாசம் காவல் டிஎஸ்பி பூரணி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் நேர்மையைப் போற்றும் வகையில் உண்மை, நாணயம், நம்பிக்கை நிறைந்த சுதந்திர இந்தியாவை உருவாக்க காந்தி கண்ட கனவை நினைவாக்கும் விதமாக அவர் பிறந்தநாளை நேர்மை விழிப்புணர்வு நாளாக உருவாக்கி ஆளில்லாத கடையை வருடம் ஒருமுறை என, தொடர்ந்து 23 ஆண்டுகளாக ரோட்டரி சங்க நிர்வாகிகள் நடத்தி வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் ஆள் இல்லாத கடையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு, பணத்தை அங்கு இருக்கும் உண்டியலில் போட்டு சென்றனர்.
மேலும் வீட்டு உபயோகத்திற்கு தேவையான பொருட்கள், புத்தகங்கள் போன்ற ஏராளமான பொருள்கள் இந்த கடையில் வைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.