குறிச்சிகுளம் பாலம் அருகே வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்த இளைஞர் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட, குறிச்சிகுளத்தை சேர்ந்த வெள்ளியப்பன்(30), என்பவர், இன்று குறிச்சிகுளம் பாலம் அருகே வெட்டு காயங்களுடன் இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்த திருநெல்வேலி, ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், மற்றும் தாழையூத்து காவல்நிலைய போலீசார் சம்பவயிடம் சென்று விசாரணை மேற்கொண்டு இறந்து கிடந்த வெள்ளியப்பன் உடலை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து போன வெள்ளியப்பன் தந்தை மாரியப்பன், புகார் அளித்ததன் பேரில் மேற்படி சம்பவம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்படி சம்பவத்தில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்ய தாழையூத்து போலீசாருக்கு உத்தரவிட்டார்.
மேலும் போலீசார் விசாரணையில் இறந்த வெள்ளியப்பன் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்பெண்ணை அவருடன் அழைத்து சென்றுள்ளார்.
இதனால் விரோதம் அடைந்த பெண்ணின் உறவினர்களான விளாகத்தை சேர்ந்த பிரமுத்து என்ற மணிகண்டன்(22), நாகராஜன்(20), கரையிருப்பை சேர்ந்த மூக்கன், தமிழ்செல்வன்(19), பூல்பாண்டி(22), சிதம்பரம் நகரை சேர்ந்த பேச்சிராஜா(23), மற்றும் செல்வகணபதி(23)ஆகியோர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து ஏழுபேரையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கைதான 7 பேரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.