தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்குள் நடந்து வந்து கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த பெட்ரோலை தன் உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் உடனடியாக விரைந்து சென்று ஓடி சென்று அந்த வாலிபரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறித்து வீசி எறிந்தனர்.

பின்னர் அவர் மீது தண்ணீர் ஊற்றினார். பின்னர் போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் தஞ்சையை அடுத்த மாப்பிள்ளை நாயக்கன்பட்டி மேலத் தெருவை சேர்ந்த முருகேசன் (32) என்பது தெரியவந்தது.
பின்னர் அந்த வாலிபரை போலீசார் தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அந்த வாலிபர் போலீசில் கூறியதாவது:
எனக்கு சொந்தமான நிலத்தை ஒருவரிடம் விற்பனை செய்தேன். அதற்கான ரூ.17 லட்சத்தில் அந்த நபர் ரூ.7 லட்சம் மட்டும் கொடுத்துள்ளார். மீதி பணத்தை நான் கேட்டபோது எனக்கு மிரட்டல் விடுத்து பணம் தராமல் காலம் தாழ்த்தி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து மீதி பணத்தை பெற்றுத் தர வேண்டும் என்று கூறினார். இந்த சம்பவம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
