தமிழகத்தில் நான்கு மடங்கு பா.ஜ.க. வளர்ச்சி கண்டுள்ளது என எச்.ராஜா கூறினார்.

திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவில், பிளாஞ்சேரி கைலாசநாதர் கோவிலில் உள்ள அஷ்டபைரவர் சன்னதி மற்றும் வராகி அம்மன் சன்னதியில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா தனது மனைவி மற்றும் பேத்தியுடன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செம்பியவரம்பல் சொர்ண பைரவர் கோவிலில் யாகம் செய்து சிறப்பு வழிபாடு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்து விரோதமாக பேசுவது, அதற்காக மோடியை எதிர்ப்பதை வழக்கமாக தி.மு.க. கொண்டுள்ளது. பிரிவினையை உருவாக்கும் வகையில் தனி தமிழ்நாடு என பேசிய ஆ.ராசா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். செயல் திட்டம் தமிழகத்தில் தி.மு.க.வை கண்டித்து பா.ஜ.க. நடத்திய உண்ணாவிரத போராட்டம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. உட்கட்சி பிரச்சினையில் நேரடியாக நான் கருத்து சொல்ல முடியாது. தமிழகத்தில் பா.ஜ.க. வளர வேண்டும் என்பது தான் எங்கள் செயல் திட்டம். பா.ஜ.க. வளர்ச்சி முன்பை விட தமிழகத்தில் நான்கு மடங்கு பா.ஜ.க. வளர்ச்சி கண்டுள்ளது. மக்களிடத்தில் தேசபக்தியை மேம்படுத்தும் வகையில் 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகள், தலைவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக மக்களிடத்தில் மாவட்டந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட தலைவர் சதீஷ்குமார், மாவட்ட துணைத் தலைவர் த.லோ. பரமசிவம், நகர செயலாளர் வாசன் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
