தலைப்பு செய்திகள்
கோவை மாநகராட்சி தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் கோவையின் முதல் பெண் மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோவை மாநகராட்சியில் இது வரை மேயர் பதவியை திமுக பிடித்தது கிடையாது. இந்நிலையில் இந்த முறை கோவை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நேற்று வெளியான மாநகராட்சி தேர்தல் முடிவுகளில் திமுக தனிப் பெரும்பான்மையுடன், வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் திமுக சார்பில் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் மேயர் பதவியைக் கைப்பற்ற போவது யார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கின்றது.
இலக்குமி இளஞ்செல்வி: தற்போது மேயருக்கான பந்தயத்தில் மூன்று பேர் முன்னிலையில் இருக்கின்றனர். அதில் முதலில் இருப்பவர் 52 வது வார்டு் உறுப்பினர் இலக்குமி இளஞ்செல்வி. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் , கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான நா.கார்த்திக்கின் மனைவி. இலக்குமி இளஞ் செல்வி ஏற்கனவே கவுன்சிலராக இருந்துள்ளார். மேலும் அவரது கணவர் நா.கார்த்திக் துணை மேயராகவும் இருந்துள்ள நிலையில் அவருக்கு மேயர் பதவிக்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிவேதா: (22 வயது)
இதேபோல மற்றொருவர் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சேனாதிபதியின் மகள் நிவேதா. 97 வது வார்டில் வெற்றி பெற்றுள்ள 22 வயதான இளம் கவுன்சிலரான நிவேதா மேயராகத் தேர்ந்தெடுத்த பட வாய்ப்புகள் இருப்பதாக திமுகவினர் மத்தியில் பேசப்படுகின்றது.
மீனா லோகு:
இவர்களை தவிர வார்டில் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட மீனா லோகு . இவர் ஏற்கனவே கவுன்சிலராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதுடன், திமுக மாநில மகளிரணி துணை செயலாளராகவும் இருந்தவர். கோவையில் கடந்த முறை திமுக கவுன்சிலர் ஆக இருந்த பொழுது அதிமுகவிற்கு எதிராக போராட்டங்களை மாநகராட்சி மன்றத்தில் நடத்தியதற்காக, மன்றத்தில் வைத்தே அதிமுக கவுன்சிலர்களால் தாக்குதலுக்கு உள்ளானவர். தற்போது இந்த மூவரில் ஒருவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.