தலைப்பு செய்திகள்
ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா நாளை சசிகலாவுடன் சந்திப்பு.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா நாளை சசிகலாவுடன் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சட்டசபைத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்விக்குப்பிறகு அதிமுகவில் சசிகலா, தினகரன் இணைப்பு குறித்த விவகாரம் விஸ்பரூபம் எடுத்துள்ளது.
அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் எனக்கோரியும் தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளார்.
இதே கருத்தை கோவை முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி உள்ளிட்டோரும் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என அதிமுகவின் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், சேலத்தில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் செம்மலை, இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா நாளை சசிகலாவுடன் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சசிகலாவை இணைக்க கோரி அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டு வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த அதிமுக முடிவுக்காக காத்திருக்கிறேன் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியது குறிப்பிடத்தக்கது.