நீலகிரி மாவட்டம் உதகை சேரிங்கிராஸ் பகுதியில் நீலகிரி கூட்டுறவு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவன கட்டிடத்தில் உள்ள 30 கடைகள் க வெளியாட்களுக்கு வாடகைக்கு விடப்பட்டு உள்ளது.

இதில் 1020 சதுர அடி கொண்ட ஒரு கடையை கேரளா அரசின் கைரளி நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளாக ஒப்பந்தமிட்டு பயன்படுத்தி வந்தது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் கைரளி நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கூட்டுறவு நிறுவன தலைவர் ஷங்கர் என்பவர் கூட்டுறவு துறை அதிகாரிகளுக்கு தெரியாமல், முன் அனுமதி இன்றி இரண்டாக பிரித்து அதில் ஒரு பகுதியை கைரளி நிறுவனத்திற்கு குறைந்த வாடகைக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த கடையின் மற்றொரு பகுதியை ஷங்கர் வேறு ஒரு ஒப்பந்தம் போட்டு தனியார் ஒருவருக்கு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே அந்த கூட்டுறவு சங்கத்தின் பதவி காலம் 2023-ம் ஆண்டு மார்ச் மாதமே முடிவடைந்ததால் தலைவர் பதவியும் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இதுவரை கைரளி நிறுவனம் நீலகிரி கூட்டுறவு நிறுவனத்திற்கு ரூ.13½ லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மூடி வைக்கப்பட்டுள்ள பாதி கடையை நேற்று இரவு தனியார் ஒருவர் திறந்து ஜவுளி பொருட்களை வைத்து பூட்டி சென்றார்.
இதை தொடர்ந்து இதுகுறித்து நீலகிரி கூட்டுறவு நிறுவன மேலாளரிடம் காவலாளி தெரிவித்தார். இதன்பேரில் பூட்டிய பூட்டின் மீது மற்றொரு பூட்டை கூட்டுறவு நிறுவன மேலாளர் போட்டுள்ளார். இதை கண்ட அந்த கடையை ஒப்பந்தத்தில் எடுத்தாக கூறப்படும் நபர் பூட்டை உடைத்து கூட்டுறவு மேலாளர் மற்றும் ஊழியர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் சம்பவ இடத்தில் கூட்டுறவு ஊழியர்களுக்கும் கடையை வாடகைக்கு எடுத்த்வர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த உள்வாடைகைக்கு கடையை எடுத்த நபர் மற்றும் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆகியோர் கூட்டுறவு நிறுவன மேலாளர் மற்றும் அங்கிருந்து 50-க்கும் மேற்பட்ட பணியாளர்களை மிரட்டி கடையை பயன்பாட்டுக்கு எடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நீலகிரி கூட்டுறவு நிறுவன கடையை ஆக்கிரமித்தவர்கள் மீதும், கடையை சட்ட விரோதமாக உள் வாடகைக்கு கொடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் கடையை மீட்டு கூட்டுறவு சங்க நிர்வாகத்திலும் ஒப்படைக்க வேண்டும் என்று உதகை மத்திய போலீஸ் நிலையத்தில் கூட்டுறவு சங்க மேலாளர் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.