பத்திரிக்கையாளரை தரம் தாழ்ந்து விமர்சித்த பாஜக தலைவர் அண்ணாமலை! – எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் கண்டனம்.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சென்னையில் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பிய நியாயமான கேள்விக்கு பதிலளிக்காமல், கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளரை அவமானப்படுத்தும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்ட விதம் கண்டிக்கத்தக்கது.
பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளை எதிர்கொள்ள திராணியில்லாமல் இதுபோன்று இழிவாக நடந்துகொள்வது என்பது பாஜகவினரின் வாடிக்கையாக உள்ளது. அண்ணாமலை மட்டுமல்ல, ஹெச்.ராஜா போன்றவர்களும் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
ஆட்சியும், ஊடகங்களை கட்டுப்படுத்தும் அதிகாரமும் தங்கள் கையிலிருக்கும் ஆணவத் திமிரே அவர்களின் இதுபோன்ற பேச்சுக்கு காரணம் என்பதை மறுக்க முடியாது.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது குறைந்தபட்ச நாகரிகத்தைக் கூட பத்திரிக்கையாளர்களிடம் கடைப்பிடிக்காமல், தரம் தாழ்ந்து ஏசியும், பேசியும் வரும் பாஜக தலைவர் அண்ணாமலையை அனைத்து ஊடக நிறுவனங்களும் புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
