புதுவை அரசு போக்கு வரத்துக்கழகமான பி.ஆர்.டி.சி. டிரைவர்கள், கண்டக்டர்கள் தாக்கப் படுவதை கண்டித்தும், பணி பாதுகாப்பு கோரியும் கடந்த 23-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி: புதுவை அரசு போக்கு வரத்துக்கழகமான பி.ஆர்.டி.சி. டிரைவர்கள், கண்டக்டர்கள் தாக்கப் படுவதை கண்டித்தும், பணி பாதுகாப்பு கோரியும் கடந்த 23-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்தது. கிராமப்புற பகுதியில் பஸ் வசதியின்றி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நேற்று அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமையில் போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடந்தது.
பேச்சுவார்த்தையின் போது ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட 12 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து முதல்-அமைச்சருடன் பேசி முடிவெடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.
கோரிக்கை நிறை–வேறும்வரை போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் அறி–வித்தனர். இதனால் 7-வது நாளாக பி.ஆர்.டி.சி. ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல்- அமைச்சர் ரங்கசாமியுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது.
எதிர்கட்சி தலைவர் சிவா, சம்பத் எம்.எல்.ஏ. மற்றும் போராட்டகுழுவினர் பங்கேற்றனர். பணிக்கு திரும்பி பஸ்களை இயக்குங்கள். கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றுவதாக முதல்-அமைச்சர் உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு ஊழியர்கள் பிற்பகலில் பஸ்களை இயக்கினர்.