பெற்றோர்கள் குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாசிக்க பழக்கப்படுத்த வேண்டும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்.

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் புத்தகத் திருவிழாவுக்காக அரங்குகள் அமைக்கப்பட்டு வரும் பணியினை நேற்று ஆய்வு செய்த, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி செய்தியார்களிடம் கூறியதாவது:

தஞ்சாவூரில் வரும் 15-ம் தேதி தொடங்க உள்ள புத்தகத்திருவிழாவில் 104 அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. புத்தக வாசிப்பு பெரியவர்களுக்கு மட்டும் இல்லை. வீட்டில் உள்ள குழந்தைகளையும் புத்தகத் திருவிழாக்களுக்கு அழைத்து வர வேண்டும்.
பெற்றோர்கள், புத்தகங்களை வாசிக்க குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் அரசுக் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதை அனைவரும் உணர முடியும்.
பள்ளிகளில் மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும், வளாகத்தில் நுழையும் போது சானிடேஸ்சர் பயன்படுத்த வேண்டும், தெர்மல் மீட்டர் கொண்டு காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் கரோனா வழிக்காட்டு முறையை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
ஏற்கனவே எல்கேஜி., யுகேஜி, வகுப்பில் 93 ஆயிரம் மாணவர்கள் படித்தனர்.

தற்போது கூடுதலாக 52 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு ஏற்கனவே எப்படிப் பாடம் எடுக்கப்பட்டதோ அதே முறையைப் பின்பற்றக் கூறியுள்ளோம். தற்போது சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. சிறப்பு ஆசிரியர்களை நியமித்த பிறகு முழுமையாக எல்கேஜி, யுகேஜி, வகுப்புகள் நடைபெறும்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை 5.34 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் தனியார் பள்ளிகளையும் சேர்ந்து 7 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் எனச் சேர்த்தால் 9 லட்சம் மாணவர்கள் இந்தாண்டு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறோம். இதன் காரணமாக அரசுப் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரில் கூடப் பள்ளிக்கல்வித்துறைக்கு மட்டுமே ரூ.36,895 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு வேளாண் துறைக்கு ரூ.34 ஆயிரம் கோடி என ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல்வர் கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்து வருகிறார் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
இந்தாண்டு நீட் தேர்வுக்கு 16 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதற்காக அரசு சார்பில் இலவச பயிற்சி அளித்து வருகிறோம். அதே நேரத்தில் நீட் தேர்வு ரத்து தொடர்பாக முதல்வர் சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறார். அத்துடன் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து எம்எல்ஏக்களும் நீட் தேர்வு தமிழகத்துக்கு வேண்டாம் எனப் போராடி வருகிறார்கள்.
இந்தாண்டு முழுமையாக பள்ளிகள் நடைபெறுகிறது. எந்தப் பாடத்தையும் குறைக்கப் போவதாக இல்லை. இதனால் மாணவர்கள் கடந்த காலங்களில் எப்படி ஒழுக்கமாக நடந்துகொண்டார்களோ அப்படி மாற வாய்ப்புள்ளது. இதற்காக ஒளிபரப்பப்படும் சிறார் சினிமா மூலம் மாணவர்களின் மனநிலையில் மாற்றம் வரும். போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாகப் போலீஸாருடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
ஆய்வின் போது எம்எல்ஏ துரை.சந்திரசேகன், மாநகர மேயர் சண்.ராமநாதன், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் பலர் உடனிருந்தனர்.
