மனைவியுடன் விவாகரத்து ஆன சோகத்தில் லேப் டெக்னீசியன் தனியார் ஓட்டல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த தர்மராஜ் என்பவரின் ஆனந்தராஜ் (31). இவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். தற்காலிக ஊழியரான இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் ஆனந்தராஜ்க்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் திருமணம் ஆன சில மாதங்களிலேயே இவரது மனைவி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஆனந்தராஜ் மட்டும் தஞ்சையில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வேலைக்கு சென்று வந்தார்.
இதற்கிடையே விவகாரத்து கேட்டு ஆனந்தராஜ் மனைவி கோர்ட்டில் விண்ணப்பத்திருந்தார். அதன் தீர்ப்பு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்தது. அதில் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆனந்தராஜ் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார். தனக்கு விவாகரத்து ஆகி விட்டதே என எண்ணி மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஆனந்தராஜ் தஞ்சையில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். திடீரென இரவில் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்த தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆனந்தராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஸ்ரீதர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.