மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்ட இடத்தில் குடிநீர் வசதி செய்து தரவில்லை என ஊராட்சி மன்ற தலைவர் குற்றச்சாட்டு , குடிநீர் இல்லாமல் நீங்கள் இருப்பீர்களா, செத்ததற்குப் பிறகு தான் வசதிகளை செய்து தருவீர்கள் என சரமாரியாக அதிகாரிகளை சாடிய மாவட்ட ஆட்சியர் :-

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் உள்ள அண்ணா திருமண மண்டபத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் குத்தாலம், கொள்ளிடம் மற்றும் சீர்காழி ஆகிய ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கோரிக்கைகளாக முன்வைத்தனர்.
கடந்த வாரம் அளக்குடி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார். இதனிடையே அளக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினி ஆய்வு மேற்கொண்டு வெகு நாட்கள் ஆகியும் பிரச்சனைக்கு தீர்வில்லை என கூட்டத்தில் குற்றம் சாட்டினார்.
உடனடியாக அங்கு இருந்த அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் சரமாரியாக கேள்வி எழுப்பினார். பைப்லைன் உள்ளிட்ட எந்த பணிகளும் ஏன் தொடங்கவில்லை என அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் கேள்வி கேட்க பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறினர். தொடர்ந்து நீங்கள் தண்ணீரில் இல்லாமல் வாழ்வீர்களா எனவும் , செத்த பிறகு தான் பணிகளை செய்வீர்களா எனவும் கடுமையாக சாடினார். ஆய்வு மேற்கொண்டால் அதன் தொடர்ச்சியாக அப்பகுதியில் நடைபெற்றுள்ள பணிகள் குறித்து கவனிக்க வேண்டாமா என அதிகாரிகளை ஆட்சியர் கடிந்து கொண்டார்.
உடனடியாக அப்பகுதி மக்களுக்கு லாரி மூலம் குடிநீர் வழங்க வேண்டும் எனவும் ஊராட்சி மன்ற தலைவர்கள் எந்த புகார்கள் இருந்தாலும் உடனடியாக என்னை நேரில் வந்து பார்த்து தெரிவிக்க வேண்டும் எனவும் ஆட்சியர் கூறினார்.