முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காரை முற்றுகையிட்டு போராட்டம் அதிமுகவில் பரபரப்பு.

இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் வளர்மதி, சிவி சண்முகம் எம்பி, வகைச்செல்வன், செம்மலை, ஆர்பி உதயகுமார், பொன்னையன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் முடிவெடுக்கப்பட்டுள்ளன. ஜூன் 23ம் தேதி திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும். அதிமுகவில் ஒரே தலைமை குறித்து, ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூடி பேசி முடிவெடுக்கப்படும். இது வரை யாரும் முடிவு செய்யப்படவில்லை.
எந்த முடிவாக இருந்தாலும் பெரும்பான்மையினரின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தான் எடுக்கப்படும். ஓபிஎஸ் கட்சி அலுவலகம் வருகைக்கும் அதிமுக தீர்மான குழு கூட்டம் நிறைவுக்கும் சம்பந்தமில்லை எனத் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அங்கிருந்து புறப்பட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். கோஷங்கள் எழுப்பினர். ஜெயக்குமாரால் தான் அதிமுக அழிந்துக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினர்.
எனவே, அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த பேச்சு தொடங்கியதில் இருந்து ஒரே பரபரப்பாக காணப்படுகிறது. ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை அதிமுகவில் வலுத்து வருகிறது. இந்நிலையில் கட்சி அலுவலகம் சென்றிருந்த ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வந்து சேர்வதற்குள் ஆலோசனை கூட்டத்தை முடித்துக் கொண்டு கிளம்பினர். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி சேலம் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.