BREAKING NEWS

மூவரைத் தாக்கி, வீட்டை சேதப்படுத்திய 7 இளைஞர்களுக்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு.

மூவரைத் தாக்கி, வீட்டை சேதப்படுத்திய 7 இளைஞர்களுக்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு.

 

மயிலாடுதுறை,  தேர்தல் முன்விரோதம் காரணமாக மூவரைத் தாக்கி, வீட்டை சேதப்படுத்திய 7 இளைஞர்களுக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கருவாழக்கரை பெருமாள்கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (47). இவரது எதிர்வீட்டைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் ராஜேஷ் என்கிற ராஜசேகர் (34). இவர்கள் இருவருக்கும் இடையே உள்ளாட்சித் தேர்தலின்போது ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.

 

இந்நிலையில் கடந்த 18.9.2016 அன்று கணேசன் அவரது உறவினர்கள் அமிர்தம், லட்சுமி ஆகியோர் அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது ராஜசேகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெங்கடேசன்(31), வெங்கடேஷ்(33), மணி(38), மணிகண்டன்(27), விஜய்(27), விக்னேஷ் (28) ஆகிய 7 பேரும் சேர்ந்து கணேசன், அமிர்தம், லட்சுமி ஆகிய 3 பேரையும் இரும்பு கம்பியால் தாக்கியதோடு, கணேசன் வீட்டையும் சேதப்படுத்தினார்களாம். 

 

இதுகுறித்து, செம்பனார்கோயில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ராம.சேயோன் ஆஜரானார்.

வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை முடிவடைந்த நிலையில், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி பி.இளங்கோ தீர்ப்பு வழங்கினார்.

 

அந்த தீர்ப்பில் ராஜசேகர், வெங்கடேசன், வெங்கடேஷ், மணி, விஜய், விக்னேஷ் ஆகிய 6 பேருக்கும் 4 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், மணிகண்டன் என்பவருக்கு மட்டும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

 

அபராத தொகையை கட்ட தவறினால் தலா 2 மாதம் கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிபதி இளங்கோ உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )